தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இந்த மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் இந்த மாவட்டங்களின் குடியிருப்பு பகுதிகளிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித்தவித்து வருகின்றனர்.

இதனிடையே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் விமானப்படையின் 4 ஹெகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெகாப்டர்கள் மற்றம் கடலோரக் காவல் படையின் 2 ஹெகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், பெருமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் ஹெகாப்டர்கள் தேவைப்படுவதால், அதிகபட்ச அளவில் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்க கோரி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றுஅமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்படுகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன”என பதிவிட்டுள்ளார்.