இந்தியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15, 1947க்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் இருந்து பிரித்துக்கொண்டு சென்ற பாகிஸ்தான் சுதந்திர தினமாக அறிவித்தது. பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது அதன் பெரும்பகுதி இந்தியாவின் வடமேற்காகவும், மேற்கு வங்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வடகிழக்காவும் இருந்தனர். அந்த 2 பகுதியையும் அவர்கள் பாகிஸ்தான் என அறிவித்தனர்.
நிர்வாக வசதிக்காக வடமேற்கு பகுதியை, மேற்கு பாகிஸ்தான் என்றும், வடகிழக்கில் இருந்த வங்க பகுதியை கிழக்கு பாகிஸ்தான் என்றும் அறிவித்தனர். ஆட்சி, அதிகாரம் அனைத்தும் மேற்கு பாகிஸ்தானிலேயே இருந்தது. இது தான் நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் அதிகமானது. இவர்களில் பெரும்பாலானவர்களின் தாய் மொழி உருது.
கிழக்கு பாகிஸ்தானில் வசித்தவர்கள் மைனாரிட்டியாக இருந்தனர். அவர்களது தாய் மொழி வங்காளம். ஆனால் மேற்கு பாகிஸ்தான் தன்னிடம் இருந்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, கிழக்கு பாகிஸ்தானிலும் உருது மொழியை திணித்தது. அனைத்து உத்தரவுகளும் உருது மொழியில் வந்தது.
இதை கிழக்கு பாகிஸ்தான் மக்கள் ஏற்கவில்லை. இதனால் அங்கு மாணவர்கள் மொழிப்போரில் ஈடுபட்டனர். அரசியல் தலைவர்களும் இந்த போரை முன்னெடுத்தனர். 1971ல் இந்த போராட்டம் நடந்தது. சொந்த நாட்டு மக்களையே ராணுவத்தையும், போலீசையும் கொண்டு அடக்கி பார்த்தனர்.இந்த போராட்டத்தில் சலாம், பர்கத், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
அதைத்தொடர்ந்து போராட்டம் தீவிரமானது. மேற்கு பாகிஸ்தான் பணியவில்லை. இதனால் 1971 டிசம்பர் 17ம் தேதி கிழக்கு பாகிஸ்தான் என்ற நாடு, வங்காள தேசம்(bangla desh) என்ற தனி நாடாக சுதந்திரம் பெற்றது.
இந்த மொழிப்போருக்கு முன்னோட்டமாக இருந்தது 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி உருவான ‘வங்க மொழி இயக்கம்’ தான். எனவே பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவிக்க வேண்டும் என வங்கதேச அறிஞர் ரபீக் குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார்.
தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூர்ந்து, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இது தான் உலக தாய்மொழி தின வரலாறு. இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், தமிழ் வாழ்க என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டின் வரைபடத்துடன் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் இந்தி எழுத்தை மையால் அழித்தும் அந்த சுவரொட்டி இடம் பெற்றுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க மத்திய அரசு பல்வேறு நெருக்கடிகளுடன், நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தி வரும் நிலை, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமிழ்மொழி பற்றை மேலும் அதிகரித்து உள்ளது. அதனால் தான் தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள், இந்தி வேண்டாம் என வீடுகளில் கோலம் போட்டு இந்திக்கு எதிராக போர்க்கோலம் பூண்டதையும் தமிழகம் பார்த்தது.
இதனால் இந்தி திணிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், தமிழ் வாழ்க என்ற சுவரொட்டிகள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி படித்தால் வேலை கிடைக்கும், வேலை கிடைக்கும் என செய்த பிரசாரமும், அர்த்தமில்லாத வெற்று கூச்சல் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள் இனி இந்தியை ஆதரித்து என்ன செய்யலாம் என்ற எண்ணத்தில் மூழ்கி கிடக்கிறார்கள்.