Skip to content
Home » பழனிகோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்….. அமைச்சர் சேகர்பாபு தகவல்

பழனிகோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்….. அமைச்சர் சேகர்பாபு தகவல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பழனி முருகன் கோயிவில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும். ஆகம விதிகளுக்கு உட்பட்டு குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழனி கோயிலில் இருந்து இடும்பன் வரை ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளது. பழனி முருகன் கோவிலில், பெரும் பொருட்செலவில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழனி முருகன் கோவிலில் 88 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் திருக்கோவில் நிதியின் மூலம் 26 பணிகளும், உபயதாரர்கள் மூலம் 62 பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணிகள் முழுமை பெற்று பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வரும் ஜனவரி 27-ந்தேதி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!