கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது பாடகி சுசித்ரா ” ஒரு முறை வைரமுத்து தனக்குக் கால் செய்து தன்னுடைய குரல் நன்றாக இருப்பதாகவும், தனக்குப் பரிசு கொடுக்க ஆசைப்படுவதாகக் கூறி தன்னை வீட்டிற்கு அழைத்ததாகவும் கூறினார்.
வீட்டிற்கு அழைத்தவுடன் தனது பாட்டியுடன் தான் சென்றதாகவும் தனியாக வருவேன் என நினைத்த வைரமுத்து பாட்டியுடன் தான் வந்ததைப் பார்த்துத் திகைத்து போனதாகவும் தெரிவித்தார். அத்துடன் அவருக்கு தனக்குப் பரிசு கொடுக்கும் நோக்கமே இல்லை வேறொரு நோக்கத்திற்காகத் தான் தன்னை அழைத்தார் எனவும் பரபரப்பாகப் பேசினார்.
மேலும், வைரமுத்துவைச் சந்தித்தபிறகு தனக்குக் கொடுக்கவேண்டிய பரிசு எங்கே எனத் தான் கேட்டதாகவும் அதற்கு வைரமுத்து 2 ஷாம்பு டப்பாவைக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக, வைரமுத்து மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது.
இதனையடுத்து, வைரமுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய பாணியில் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்” என கூறியுள்ளார்.
தொடர்பற்ற மொழிகள் பேசுவர் பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர் தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர் இந்த நோய்க்கு ‘Messianic Delusional Disorder’ என்று பெயர் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள் உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்” என கூறியுள்ளார்