மசோதா நிலுவை, துணை வேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற விவாதங்கள் விபரம்..
தமிழ்நாடு அரசு: துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததால் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசியல் சாசனப்படி ஆளுநர் நடந்துகொள்வதில்லை. ஆளுநர் தேவையா என்ற வாதங்கள் ஒருபக்கம் நடக்கிறது. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்
நீதிபதிகள்: மசோதாக்களை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் என்ற நிவாரணம் வழங்க முடியும்?
தமிழ்நாடு அரசு: குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்டால் மத்திய அரசின் ஆலோசனைப் படி குடியரசுத் தலைவர் முடிவு செய்வார். அதேவேளையில், அரசியல் சாசன விதிமுறை 200ன் படி ஆளுநர் செயல்பட உத்தரவிட வேண்டும். மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட முடியாது. எனவே சட்டப்பிரிவு 200ன் படி செயல்பட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
நீதிபதிகள்: ஒருவேளை மசோதா சரியாக இல்லை என ஆளுநர் கருதினால் என்ன செய்வது ?
தமிழ்நாடு அரசு: அவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும். ஆண்டுக் கணக்கில் ஆளுநர் மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளார். “As soon as possible” முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரசியல் சாசன விதிகளின் கீழ், ஆளுநருக்கு கூடுதல் வாய்ப்பு என்பது இல்லை. அவருக்கு விருப்பமான வழியில், அரசியல் சாசன விதிகளை புரிந்து செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளார். மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக சட்டப்பேரவைக்கு கூறுகிறார். இதன் பொருள், மீண்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்ட மன்றத்திற்கு போய்விட்டது என்பதுதான். இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல். மேலும் ஒரு அமைச்சரை திடீரென அவரே டிஸ்மிஸ் செய்கிறார். இது தொடர்பாக செய்திகளை பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்..
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுத் தரப்பின் வாதத்தை இன்றே முடிக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் மத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் வாதத்தை நாளை மறுதினம் கேட்போம் என தெரிவித்தனர். இதனையடுத்து
தமிழ்நாடு அரசு வாதம்: எந்தக் காரணத்தையும் கூறாமல், மசோதாவை கிடப்பில் போட்டு வைப்பது சட்ட விரோதம். மேலும், கேசரி ஹந்த் வழக்கின் தீர்ப்பின்படி, சட்டமன்றத்தில் மறுபடியும் மசோதா இயற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அதனை கிடப்பில் போடக்கூடாது இவ்வாறு தமிழக அரசு சார்பில் வாதம் மேற்கொள்ளப்பட்டது.. இதனையடுத்து ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என்று நாளை மறுநாள் தெரிவிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இன்னும் 24 மணி நேரம் இருப்பதால், ஆளுநர் அரசியல் சாசனப்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த வழக்கில் பரந்த நோக்கத்திலான அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைத்தனர்.