Skip to content
Home » உருவானது ‘டானா’ புயல்…..நாளை தீவிர புயலாக வலுப்பெறும்…எச்சரிக்கை…..

உருவானது ‘டானா’ புயல்…..நாளை தீவிர புயலாக வலுப்பெறும்…எச்சரிக்கை…..

மத்திய கிழக்கு  வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில்  அக்.21ம் தேதி  காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.  அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி,  மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று  (22ஆம் தேதி) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது.  தொடர்ந்து இன்று காலை  (23ஆம் தேதி) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து,  24-ஆம் தேதி ( நாளை)  காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும் என்றும்,  இது,  வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள  கடற்கரை பகுதிகளில், பூரி  – சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக  நாளை  இரவு அல்லது  25 ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் அப்பகுதிகளில் மணிக்கு 100 முதல் 110  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலுக்கு  கத்தார் நாடு பரிந்துரைத்த டானா (DANA) என்கிறு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக  வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இந்தாண்டு வங்கக்கடலில் ரிமால் (REMAL) புயல், அரபிக்கடலில் அஸ்னா (ASNA) புயல் உருவான நிலையில் நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழைக்கால முதலாவது புயலாகவும் (DANA) உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!