Skip to content
Home » திருச்சியில் கோழியை தெரு நாய் கடித்ததாக புகார் …..உணவு அளித்த முதியவர் கைது….

திருச்சியில் கோழியை தெரு நாய் கடித்ததாக புகார் …..உணவு அளித்த முதியவர் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து அன்பில் அருகே ஜக்கம்மாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலரும், ஆற்றுப் பாசன சங்க தலைவருமான சண்முகம் வயது 57, இவர் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் இரண்டு நாய்களும், கோழிகளும் வளர்த்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த சிவகாமசுந்தரி வயது 68, இவர் ஒரு நாய் மற்றும் சில கோழிகளும் வளர்த்து வருகிறார்.
சண்முகம் தான் வீட்டில் வளர்க்கும் இரண்டு நாய்கள் மட்டுமல்லாது தெருவில் வளரும் 10க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவு அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சண்முகம் வளர்க்கும் இரண்டு நாய்கள் மட்டுமல்லாது தெருவில் உள்ள ஒரு நாய் சிவகாமிசுந்தரியின் கோழியை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவகாமிசுந்தரி, சண்முகத்திடம் சண்டையிட்டு உள்ளார். இதில் சண்முகம் சிவகாமசுந்தரியை தகாத வார்த்தைகளில் பேசி தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சிவகாமசுந்தரி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சண்முகசுந்தரத்தை கைது செய்து லால்குடி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து விசாரித்த போது…. சுப்புரமணி என்பவர் முன்னாள் திருச்சி ஆற்று பாதுகாப்பு சங்கம் தலைவராக இருந்துள்ளார். அப்போது சுப்பிரமணி ஆற்று பாதுகாப்பு சங்கத்தை வைத்துக்கொண்டு பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு முறைகேடாக மணல் அள்ளுவதை கண்டு கொள்ளாமல் இருந்து வந்ததாகவும், சிவகாமசுந்தரியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சுப்பிரமணி 40 லட்சம் ரூபாய்க்கு வீடு கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுப்பிரமணி சிவகாமசுந்தரியிடம் நாய் கடித்தது தொடர்பாக புகார் அளிக்குமாறு தெரிவித்ததால் தான் சிவகாமசுந்தரி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் லால்குடி போலீசார் தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக வழக்கு பதிவு செய்து லால்குடி சிறையில் சண்முகத்தை அடைத்தனர்.

அன்பில் அருகே ஜக்கம்மாராஜபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் கடந்த அதிமுக ஆட்சியில் தோகூரிலிருந்து கல்லணை வரை கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியாக மணல் அள்ளுவதால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்மட்டம் குறைந்து வருகிறது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை விசாரித்த நீதிபதி மணல் குவாரி உயர்மட்ட குழு அமைத்து வரும் 16ஆம் தேதிக்குள் முறையான விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டதால் தோகூரில் இருந்து கல்லணை பகுதியில் அதிகப்படியாக மணல் அள்ளியதால் அந்தப் பகுதியில் பொக்லின இயந்திரங்களை கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக ஆர்வலர் சண்முகத்தை போலீசார் கைது செய்திருப்பது முன்னாள் ஆற்றுப் பாசன சங்க தலைவர் சுப்பிரமணியன் மற்றும் மணல் திருடும் மாபியா கும்பலின் சூழ்ச்சி தான் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!