தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் தமிழகத்தில் நிகழும் கொலை சம்பவங்கள் குறித்து பேச அனுமதி கோரினார். நேற்று சேலத்தில் ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக் காட்டி அவர் பேசினார். “அன்றாட நிகழ்வுகள் போல் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகிறது.” எனக் கூறினார். ஆனால், அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
திமுக ஆட்சியில் கொலைகள் நடக்கவில்லை என கூறவில்லை; நடந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியைப் போல டிவியை பார்த்து தெரிந்து கொள்ளவில்லை. தூத்துக்குடி, சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிட முடியாது. கோவை சம்பவம் தற்கொலை.
மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்ய முயற்சி செய்தபோது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழிவாங்கும் நோக்கில் ஈரோடு சம்பவம் நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள், கூலிப்படைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில்தான் அதிக கொலைகள் நடைபெற்றுள்ளன 2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு. 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன. கொரோனா காலத்தில் லாக் டவுன் இருந்த போதும் அதிக கொலை நிகழ்ந்துள்ளது. 2023-ல் கொலை, கொலை முயற்சிகள் 49,220-ஆக இருந்த நிலையில் 2024ல் 31,000-ஆக குறைந்துள்ளது. 2024ல் கொலை குற்றங்கள் 6.8 விழுக்காடு குறைந்துள்ளது.
பழிவாங்கும் நோக்கில் செய்யப்படும் கொலைகள் 2024 42.72% குறைந்துள்ளன. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 200-க்கு மேற்ட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது என்று கூறினார்.
.