திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படும் இவற்றுக்கு, ஜனாதிபதியை அழைத்து ஜூன் 3ம் தேதி திறப்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது
இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபத்திக்கு அழைப்பு விடுக்க நேற்று மாலை டில்லி புறப்பட இருந்தார். சென்னை விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, முதல்-அமைச்சரின் செயலாளர் உதயசந்திரன் ஆகியோரும் வந்தனர். இரவு 8.30 மணிக்கு டில்லி புறப்படும் விமானத்துக்காக காத்திருந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்பட தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தின் வி.ஐ.பி. அறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காத்திருந்தார். இரவு 9.30 மணியை தாண்டியும் விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினை சரிசெய்யப்படவில்லை. இன்னும் அதிக தாமதமாகும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டில்லி பயணத்தை ரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து வீடு திரும்பினார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் டில்லியில் இன்று காலை ஜனாதிபதி முர்முவை சந்தித்து கலைஞர் கோட்டம் மற்றும் ஆஸ்பத்திரியை திறந்து வைக்க நேரில் அழைப்பு விடுக்கிறார்.