Skip to content
Home » எஸ்எஸ்எல்சி தேர்வு… நாளை முடிகிறது….25ல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

எஸ்எஸ்எல்சி தேர்வு… நாளை முடிகிறது….25ல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

எஸ்.எஸ்.எல்.சி.  பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள்.  இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை (வியாழக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது.

இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை வேலைநாட்களில் நடைபெற உள்ளது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண்ணை ஆன்லைன் வாயிலாக வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யப்படும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதற்கு ஏற்றவாறு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு தேர்வுத்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-  மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாக கணக்கிட்டு பாடவாரியான, பயிற்று மொழி வாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கேற்றவகையில் தமிழ், ஆங்கில வழிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்திட வேண்டும். தேர்வு முடிவு மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலிருந்தும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு பாடங்களை கற்பிக்கும் தகுதிவாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியில் இருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்யவேண்டும். எந்தவொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களுடைய ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!