தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு எஸ்.எஸ்.ஐயாக இருப்பவர் காவேரி. இவர் ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள உணவகத்தில் கடந்த வாரம் டிபன் சாப்பிட்டு விட்டு கல்லா அருகே பணம் கொடுக்க வந்தார். அப்போது அந்த உணவக உரிமையாளர் முத்தமிழ் என்பவர், ஏற்கனவே பாக்கி உள்ள ரூ.20ஐயும் தருமாறு கேட்டு உள்ளார்.
இதனால் எஸ்.எஸ்.ஐ. காவேரிக்கு கோபம் வந்தது. தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி கடை உரிமையாளரை தாக்க முயன்றார். அருகில் இருந்த ஓட்டல் ஊழியர் அதை தடுத்து விட்டார். பின்னர் கெட்ட வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த காவேரி, 20 ரூபாயை வீசி எறிந்து விட்டு போய்விட்டார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. இதுபற்றி தருமபுரி எஸ்.பி. மகேஸ்வரனிடம் முத்தமிழ் புகார் செய்தார். எஸ்.பி. விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து காவேரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.