கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்து 4 நாட்டு படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் சிறை பிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
விசாரணைக்கு பின்னர் தமிழக மீனவர்கள் 23 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறை பிடிக்கப்பட்ட 23 நாட்டுப்படகு மீனவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் விவரம் வெளியாகவில்லை. காங்கேசன் துறைமுகம் கடற்கரை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு பின்னரே தமிழக மீனவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரியவரும்.