திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகேயுள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் சின்ன கிருஷ்ணன். இவரது மகன்கள் ஏழுமலை (47), திருமலை (44). கூலி தொழிலாளர்கள். ஏழுமலைக்கு திருமணமாகி, மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். திருமலை, திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவரும் பொதுவான வீட்டை இரண்டாக பிரித்து தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், திருமலை வீட்டை விற்று தனக்கு பணத்தை தரும்படி கேட்டு அண்ணன் ஏழுமலையிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு மதுபோதையில் இருந்த திருமலை, மீண்டும் ஏழுமலையிடம் சென்று வீட்டை விற்க பத்திரத்தை தரும்படி கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, திருமலையை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, வீட்டின் அருகே தோண்டப்பட்ட கழிவுநீர் தொட்டி பள்ளத்தில் திருமலையின் உடலை தள்ளி, மண்ணை போட்டு மூடியுள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு தப்பிச்சென்றார்.
இதனிடையே, நேற்று காலை அக்கம் பக்கத்தினர் தகராறு குறித்து விசாரிக்க சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. மேலும், தோட்டத்தில் இருந்த பள்ளத்தில் திருமலையின் உடல் மண்ணால் மூடப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கடலாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஏழுமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.