கரூர் மாவட்டம் உள்ள கிருஷ்ணராயபுரம் வீரராக்கியம் முனையனூர் தோகைமலை பகுதிகளில் இந்த ஆண்டு சாகுபடி செய்த விவசாயிகள் சம்பா நெல்பயிர்களை அறுவடை செய்தபின்பு சூரியகாந்தி சாகுபடியை தொடங்கினர்.
சூரியகாந்தி பூ சாகுபடிக்கு சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் உகந்தது என்று விவசாயிகள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கடலை சாகுபடி செய்யும் போது ஊடுபயிராக சூரியகாந்தி பூ சாகுபடி செய்து வந்தனர்.
இந்த நடைமுறை காலப்போக்கில் மாறி முழு சாகுபடியாக சூரியகாந்தி பூ சாகுபடியை செய்து வருகின்றனர். 105 நாட்களில் விளைச்சல் ஆகும் சூரியகாந்தி பூக்களின் விதை ஒரு ஏக்கருக்கு 5 கிலோ தேவைப்படும் என்கின்றனர். குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறை வயலில் தண்ணீர் பாய்ச்சப்பட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.
அறுவடை செய்யப்படும் சூரியகாந்தி விதைகளை மணப்பாறை, ஈரோடு, சிவகிரி போன்ற பகுதிகளில் கிலோ ரூ.35 வரை விற்பனை செய்கின்றனர். நிர்ணயிக்கப்படாத விலைக்கு விற்பனையாகும் சூரியகாந்தி விதைகள், நல்ல மகசூல் என்றால் ஒரு ஏக்கருக்கு தலா 1500 கிலோ மகசூல் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தோகைமலைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்த மாதம் அறுவடைக்கு வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.