பொங்கல் விழாவின் 3ம்நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மக்கள் வெளியிடங்களுக்கு குடும்பம் குடும்பமாக செல்வது வழக்கம். அந்த வகையில் திருச்சி மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமான முக்கொம்பில் இன்று காலை 10 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.
திருச்சி மாவட்டம் மட்டுமல்ல, பக்கத்து மாவட்டங்களான தஞ்சை, புதுகை, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குழந்தை குட்டிகளுடன் வந்தனர். இதனால் இன்று காலையிலேயே முக்கொம்பு பூங்கா மக்கள் வெள்ளத்தால் களைகட்டியது.
குழந்தைகள் அங்குள்ள ராட்டினம், ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டு, நீர் விளையாட்டுகளில் பொழுதை கழித்தனர். குழந்தைகளுக்கான ரயிலில் ஏறி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி முக்கொம்பில் ஜம்கிரீம் மற்றும் நொறுக்கு தீனி வியாபாரமும் விறுவிறுப்புடன் நடந்தது.
இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் காவிரி பாலத்திலும், மற்றும் உள்ள பொழுது போக்கு விளையாட்டுககளிலும் பங்கேற்று செல்பி எடுத்தனர். தொடர்ந்து முக்கொம்புக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதுபோல திருச்சி வண்ணத்துபூச்சி பூங்கா மற்றும் கல்லணை ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.