Skip to content

மது போதையில் மருந்து கொடுக்கும் ஊழியர்… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி,  கிருஷ்ணகிரி, நாமக்கல்,  கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர்த்து ரெப்ரல் சென்டராகவும் இருந்து வருவதால் அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஏராளமானோர் மேல்சிகிச்சைக்கு இங்கு வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பழைய புறநொயாளிகள் பிரிவில் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதியம் 12 மணி வரை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்திலும் மருந்து , மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை வாங்குவதற்காக மருந்தகம் சென்றனர். அப்போது மருந்தகத்திலிருந்த மருந்தாளுனர் மதுபோதையில் நோயாளி கொடுத்த மருத்துவ சீட்டை கீழே போட்டு விட்டு அதற்கு பதிலாக மாற்றுச்சீட்டை பார்த்து மருந்து கொடுத்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்சசியடைந்த பொதுமக்கள்  மருந்தக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த  அரசு மருத்துவமனை  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மருந்தாளுநர் மாதேசை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். இது குறித்த நோயாளியின் உறவினர் ஹரி கூறுகையில், “எனது மாமா மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக நான் மருந்து வாங்க வந்த போது மருந்தகத்தில் இருந்த ஊழியர் மது போதையில் மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சடைந்த நாங்கள் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால் அவர் எந்த பதிலும் கூறவில்லை. அவரை மருத்துவ பரிசோதனை செய்து அவர் மீது துரை ரீதியான நடவடிக்கை வேண்டும். மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு உரிய பாதுகாப்பான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
இந்நிலையில் மாதேஷுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு அவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை உறுதி செய்து வருகின்றனர்.

error: Content is protected !!