கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 10 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதிற்கு உட்பட்ட 2 சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த4 மாணவர்களும் 2 மாணவிகளுக்கு கடந்த சில மாதங்களாகவே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் 10 98 என்ற குழந்தைகளுக்கான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் சிறுவர்கள் சேட்டை உண்மை என தெரியவந்ததால், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரி புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் மகளிர் போலீசார் அந்த நான்கு சிறுவர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் மாணவர்கள் பல நாட்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடி செல்போனில் ஆபாச படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அந்தப் படங்களை பார்த்து விடுமுறை நாட்களில் மாணவிகளை தனியாக அழைத்துச் சென்று தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் நான்கு சிறுவர்களும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.