நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திரைப்பட இயக்குநராக இருந்தபோது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு முதல் புகார் அளித்து வருகிறார். சீமான் தன்னை ஏமாற்றிவிட்டார் என கண்டபடி பேசி அடிக்கடி வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார் விஜயலட்சுமி.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீமான் மீது சென்னை கமிஷனர் அலுவலகம் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஜயலட்சுமி. அவருக்கு தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆதரவாக இருந்து வந்தார். விஜயலட்சுமி அளித்த புகாரின் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வழக்கை வாபஸ் பெற்றார் விஜயலட்சுமி.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி, வழக்கை வாபஸ் பெற சீமானிடம் இருந்து பணம் பெறவில்லை என்றும், தமிழ்நாட்டில் தனக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் ர்நாடகாவுக்கே செல்வதாகவும் கூறினார். மேலும் தனக்கு ஆதரவாக இருந்த வீரலட்சுமி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார் விஜயலட்சுமி.
ஒரு வழியாக இந்த விவகாரம் முடிந்துவிட்டதாக நினைத்த நேரத்தில், கர்நாடகா சென்ற பிறகு மீண்டும் சீமான் மற்றும் வீரலட்சுமி மீது குற்றச்சாட்டுக்களை கூறி வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார் விஜயலட்சுமி. இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “2 பெண்களை வைத்து திமுக அரசியல் செய்வதாக சீமான் கூறினார். திமுக என்னை வைத்து அரசியல் செய்தால் எனக்கு நியாம் பெற்றுக்கொடுத்திருப்பார்கள்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட என் அக்காவை அழைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்து போலீஸில் புகார் அளித்தேன். எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். 2011 தேர்தலின் போது அதிமுக, சீமானை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, என் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது எம்.பி தேர்தல் வருகிறது. நான் யாருக்கும் ஒத்துழைக்க மாட்டேன். சீமானுக்கு பயந்து நாங்கள் தங்குவதற்கு கூட தமிழ்நாட்டில் வீடு கொடுக்கவில்லை. அப்போது எனக்கு கர்நாடகாதான் உதவி செய்தது.
என் அம்மா பிணத்தை வைத்துக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவித்தேன். அப்போதும் எனக்கு கர்நாடகாதான் உதவியது. கர்நாடகாவில் பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக 12 வருடங்களாக தமிழ் மண்ணில் என்னை கதற விடுகிறீர்கள். 12 வருடங்களாக தமிழ்நாட்டு போலீசார் ஆதாரங்களை வாங்கி வைத்துக்கொண்டு அழித்து விடுகிறார்கள். இப்போது
என் போனை வாங்கி வைத்துள்ளார்கள். சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சீமான் – விஜயலட்சுமி போரை முடிவுக்கு கொண்டு வர கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறேன். கர்நாடக நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடருவேன்” என்று தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். விஜயலட்சுமி மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்துவிட்டாரா என சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.