கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.
கடந்த மாதம் கோவில் அருகில் அமைந்துள்ள நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்ற போது, அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறைக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு
செய்யும் பணியில் அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் நேற்று ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று காலை வெண்ணைமலை பேருந்து நிறுத்தம் அருகில் ஐந்து கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அப்போது அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.