திருச்சியில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடப்பு அரசியல் சூழல்கள், கட்சியின் உட்கட்சி தேர்தல் நிலவரங்கள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது;
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் முன்மொழியப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை நசுக்கும் தீய நோக்கத்துடனுடம், வக்ஃப் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் எண்ணத்துடனும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளது.
வக்ஃப் சொத்துக்கள் பொதுச் சொத்துகள் அல்ல; அவை மசூதிகள், மதரஸாக்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு மத நோக்கங்களுக்காக அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்கள். பாஜக அரசின் இந்த பிற்போக்கு நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிப்பதோடு முன்மொழியப்பட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மாநில அரசு கைவிட்டு, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.போதுமான நிரந்தர கொள்முதல் நிலையங்களையும், குடோன்களையும் அமைக்கும் செயல்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுப்பதோடு, நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கெதிராக தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் மற்றும் தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள், கண்ணியம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோருகிறது. தமிழகத்திலும் இச்சட்டத்தை இயற்றி சிறுபான்மை பாதுகாப்பில் தமிழகம் முன்மாதிரியாக திகழ வேண்டும் எனவும் தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.
தமிழக அரசுப் பள்ளிகளில் மத அடிப்படையிலான, சமூகநீதி கருத்துக்களுக்கு எதிரான மற்றும் பிற்போக்கான கருத்துக்களை திணிக்கும் வகையிலான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான செயல்பாடுகளே அதிகம் நடைபெறும் துறையாக பள்ளிக் கல்வித்துறை மாறியுள்ளது.இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் முழு பொறுப்பேற்க வேண்டும்.பள்ளிக் கல்வித்துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் சர்ச்சைகள் குறித்தும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தித்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தியும், தமிழக சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளை வாக்குறுதிபடி விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசு, விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் 16 அன்று தலைநகர் சென்னையில் லட்சக்கணக்கானோர் அணிதிரளும் மாபெரும் பேரணியை நடத்த எஸ்டிபிஐ கட்சி திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு நெல்லை முபாரக் கூறினார்.