Skip to content

தஞ்சை… சந்தனமாலை செய்முறை பயிற்சி…

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில், மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை தஞ்சாவூர் கைவினைக் கலைப்பொருள் செய்முறை விளக்க நிகழ்வு தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கைவினைக் கலை பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் சந்தன மாலை குறித்த செய்முறை பயிற்சி முகாம் தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் சந்தன மாலைகள் ஓர் அழகிய கலைப்படைப்பு மட்டுமல்ல, தஞ்சாவூரின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக திகழ்கின்றன. நுணுக்கமான வடிவமைப்புடன் நறுமணம் வீசும் சந்தன மாலைகள்‌ அனைத்து விழாக்களிலும் பெருமையாக பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய தலைமுறையினர் நமது பாரம்பரிய கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வதும், அதற்கான ஆதரவினை ஊக்குவிக்க செய்வதும்‌ தான் இப்பயிற்சியின் நோக்கமாகும். இப்பயிற்சியினை தஞ்சாவூர் சந்தன மாலை கலைஞர் தண்டாங்கோரை செல்வராசு வழங்கினார். வம்பரை மரப் பவுடர், பிசின் கலந்து மாவாக்கி அச்சுகள் மூலம் மணிகள் செய்யப்பட்டு கோர்க்கப்படுகிறது. அதன் பின் சந்தன சாயத்தில் நனைத்து ஜால்ரா, பூரணி, ஜரிகை வேலைப்பாடுகள் செய்து தஞ்சாவூர் சந்தன மாலைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக செய்து காண்பித்தார்.

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை 35க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் தஞ்சாவூர் சந்தன மாலையினை அவர்களே செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார், மாவட்ட தொழில் மைய நிர்வாக உதவியாளர்கள் காந்தி, சிற்றரசு, மாவட்ட கள அலுவலர் பிரவீன் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!