Skip to content
Home » சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

வேலூர் மாவட்டம், கம்பங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான புஷ்பராணி. இவர் மற்றும் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் நேற்று வேலூரில் இருந்து ஒரு காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தனர். அங்கு அவர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது புஷ்பராணி கையில் வைத்திருந்த மணிபர்சை தவற விட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் தேடிப் பார்த்தப் போது மணிபர்ஸ் கிடைக்கவில்லை. பர்சில் ரூ.5,300 மற்றும் ஏ.டி.எம். கார்டு, ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்டவை இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார். இந்நிலையில், மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கார்களில் அம்மன் படம் வரையும் வேலை பார்த்து வந்த மாகாளிகுடியைச் சேர்ந்த அறிவானந்தம் என்பவர், அந்தப் பகுதியில் கீழே கிடந்த மணிபர்சை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.பின்னர் போலீசார் புஷ்பராணியை காவல் நிலையம் வரவழைத்து பர்சை ஒப்படைத்தனர். நேர்மையாக செயல்பட்ட அறிவானந்தத்தை சமயபுரம் போலீசாரும், பெண் பக்தர் குடும்பத்தினரும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!