Skip to content

சூட்கேஸில் சிறுமி சடலம்.. சிக்கிய பெங்களூரு தம்பதி..

  • by Authour

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் உள்ள சிறு பாலத்தில் கடந்த மாதம், 30ல் துர்நாற்றம் வீசியது. வி.ஏ.ஓ., ஜெயகுமார், சங்ககிரி போலீசில் புகார் கொடுத்தார். அப்போது அங்கிருந்த சூட்கேஸில் பாலிதீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி பெண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அடங்கிய தனிப்படையினர் விசாரித்தனர். இதுதொடர்பாக பெங்களூரு, பாகனபள்ளியை சேர்ந்த, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதியான, அபினேஷ்சாகு, (40) அஸ்வின்பட்டில்(37) ஆகியோரை சங்ககிரி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது..  வைகுந்தம் சுங்கச்சாவடியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து திரும்பிய கார்களின் பதிவெண்கள், அப்பகுதியில் உள்ள மொபைல் போன் கோபுரத்தில் பதிவான எண்கள், சடலம் கண்டெடுத்த இடத்தில் கிடைத்த வெளிநாட்டு வங்கி பெயர் அச்சிட்ட பிளாஸ்டிக் பையை வைத்து விசாரணை நடத்தினோம். அதில், 114 கார்கள், அந்த சாலையில் குறிப்பிட்ட இரு நாட்களில் வந்து சென்றது தெரியவந்தது. அதேநேரம் அங்கு பயன்படுத்திய மொபைல் எண்கள் குறித்தும் விசாரித்தோம். அனைவரும் வந்து சென்ற காரணத்தை சரியாக கூறினர். ஆனால், எஸ்.யு.வி., 300 மாடல் கொண்ட, கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட காரை ஓட்டி வந்த அபினேஷ்சாகு, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். பின் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. அந்த மொபைல் மூலம் யார், யாரிடம் பேசினார் என விசாரித்தோம். பின் ஒடிசாவில் இருந்த, அபினேஷ்சாகுவை, கடந்த, 26ல் பிடித்தோம். அவரது மனைவி அஸ்வின்பட்டிலை நேற்று தான் பிடித்தோம். அவர்களிடம் விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர், முன்ட்மால் பகுதியை சேர்ந்த சுமைனா (15) என்ற சிறுமி, ஒடிசாவில் உள்ள அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தார். அதை, அபினேஷ் சாகுவின் தந்தை நடத்துகிறார்.  இதனால் அச்சிறுமியை வீட்டு வேலைக்கு அபினேஷ் சாகு, பெங்களூரு அழைத்து வந்தார். அவர் சரியாக வேலை செய்யாத கோபத்தில், அஸ்வின்பட்டில், சிறுமி தலையில் தாக்கியுள்ளார். அதில் அவர் உயிரிழந்தார். இதனால் சடலத்தை சூட்கேஸில் அடைத்து எடுத்துவந்து, வைகுந்தத்தில் வீசிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!