Skip to content
Home » சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …

சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …

சபரிமலையில் தற்போது மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் நேற்று முன்தினம் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து 18-ம் படிக்கு அய்யப்ப சாமி பவனி நடைபெற்றது. நடப்பு சீசனின் கடைசி நெய்அபிஷேகம் இன்றுடன் நிறைவடைகிறது. தங்க ஆபரணத்தில் ஜொலிக்கும் அய்யப்பனை தரிசிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதனால் சபரிமலையில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளனர். சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.30 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இன்று முதல் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.  சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி தொடங்கிய படி பூஜை நாளை (வியாழக்கிழமை) வரை நடைபெறும். மேலும், நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  நாளை இரவு 10 மணிக்கு மாளிகப்புரத்தம்மன் குருதி நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அன்றையதினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி திறக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!