Skip to content

ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

ஒடிசா மாநிலம் பர்கீஸ் பகுதியைச் சேர்ந்தவர் கபில் பகிரா. இவரது மனைவி காயத்ரி பகிரா (27). இவர்களும், உறவினர்கள் 27 பேரும் தீபாவளியையொட்டி மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்க ரயிலில் தமிழகம் வந்தனர். கடந்த 11-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்துக்கு சென்று விட்டு குடும்பத்துடன் கடந்த 12-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏற திட்டமிட்டனர்.
காயமடைந்த காயத்ரி பகிரா
அதிகாலை 2.55 மணிக்கு ரயில் திருப்பூர் நடைமேடை 2-ல் வந்து நின்றது. அவர்கள் ஏற வேண்டிய பெட்டி நிற்கும் இடம் தெரியாமல் தூரத்தில் நின்றதாக தெரிகிறது. அனைவரும் ஏறுவதற்குள் ரயில் கிளம்பியது.

அந்த நேரத்தில் காயத்ரி பகிரா கைக்குழந்தையுடன் ஓடி வந்து ரயில் படிக்கட்டில் ஏற முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்தார். இதில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். கையில் வைத்திருந்த குழந்தை நடைமேடையில் விழுந்ததால் பயணிகள் ஓடிச்சென்று மீட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதில் காயத்ரி பகிராவுக்கு வலது கை, இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!