ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையில்,
‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ (Run for Little Hearts) என்னும் மாரத்தான் தொடர் ஓட்ட நிகழ்ச்சி இன்று அதிகாலை பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி
டாக்டர்.ரகுபதி வேலுசாமி ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்தனர்.மூன்று வெவ்வேறு பிரிவுகளில் இந்த மாரத்தான் நடைபெற்றது. அனைத்து வயதினருக்கும் 1 & 3 கி.மீ இதில் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஒன்றாக ஓடினர். 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் 5 கிமீ ஓட்டம் நடைபெற்றது. மேலும் 10 கி.மீ பிரிவில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். 5 மற்றும் 10 கிமீ பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசு தொகை ரூ.75,000 வழங்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.