Skip to content
Home » நாக் அவுட் சுற்றில் ரொனால்டோவை களம் இறக்காதது ஏன் ? – பயிற்சியாளர் விளக்கம்

நாக் அவுட் சுற்றில் ரொனால்டோவை களம் இறக்காதது ஏன் ? – பயிற்சியாளர் விளக்கம்

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில்  ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் போர்ச்சுக்கல் கோல் மழை பொழிந்தது. போர்ச்சுக்கலின் ராமோஸ் 51-வது நிமிடத்திலும், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், ராமோஸ் 67-வது நிமிடத்திலும், 92-வது நிமிடத்தில் ரபேல் லியோ தலா ஒரு கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தார். இறுதியில், போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ களமிறங்கவில்லை. முதல் 11 வீரர்களில் அவர் இடம்பெறவில்லை.அவருக்கு பதிலாக களமிறங்கிய ராமோஸ், ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ளதால், இனி ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக ரொனால்டோ வெளியே அமர வைக்கப்பட்டது கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 5 கோல்கள் அடித்து போர்சுகல் அணி வலுவான முன்னிலையில் இருந்த போதுதான் 74-வது நிமிடத்தில்தான் ரொனால்டோ களமிறக்கப்பட்டார். முன்னதாக தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பெரும் தவறுகளைச் செய்திருந்தார் ரொனால்டோ. இதனால் அவர் வரும் போட்டிகளில் ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போர்ச்சுகல் அணி பயிற்சியாளர் சாண்டோஸ் கூறுகையில் , இது விளையாட்டு உக்தி , அனைத்து வீரர்களும் வித்தியாசமானவர்கள்,சுவிட்சர்லாந்திற்கு எதிரான இந்த போட்டிக்கு இது தேவை என்று நான் நினைத்தேன்.கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். இந்த அணியைப் பற்றி நாம் கூட்டாகச் சிந்திக்க வேண்டும். “நான் ரொனால்டோவுடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்திருக்கிறேன். அவரை அவரது 19 வயது முதலே நான் அறிந்தவன். பயிற்சியாளர் – வீரர் என்ற உறவில் மனிதார்த்த காரணிகளை இருவருமே புரிந்து கொண்டிருக்கிறோம். “காலிறுதியில் மொராக்கோவிற்கு எதிரான ஆட்டம் மிகவும் கடினமானது, ஆனால் போர்ச்சுகல் அணி நல்ல நிலையில் இருப்பதாக அவர் கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!