சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பெண் காவலர்கள் குறித்து அவதூறு வகையில் கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த சவுக்கு சங்கரை கடந்த 4ம் தேதி தேனியில் கைது செய்தனர். தற்போது சவுக்கு சங்கர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது. இதற்கிடையே சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று பெண் காவலர்கள் பற்றி சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை வெளியிட்டதற்கு ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது ‘ரெட் பிக்ஸ்’ ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக ரெட் பிக்ஸ் ஊடகம் கருதுகிறது. சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் அந்த வீடியோ பிரைவேட் செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.