பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது.அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ள சூழலில், அவருக்கு எதிராக மற்றொரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேசியதற்காக ராகுல் காந்தி மீது இந்த அவதூறு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, கடந்த ஜனவரி 9-ந்தேதி அரியானாவின் ஹரித்துவார் பகுதியில் ராகுல் காந்தி பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறும்போது, 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் காக்கி அரை கால் சட்டைகளை அணிந்து கொண்டு, இந்து பள்ளிகளை நடத்தி கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் 2 முதல் 3 பணக்காரர்கள் உள்ளனர் என கூறியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர் கமல் பதாரியா என்பவர் ஹரித்துவார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக பீகாரில் மற்றொரு அவதூறு வழக்கும் ராகுல் காந்தி மீது பதிவாகி உள்ளது.
