கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, விருதுநகர் அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் மூலம் மொத்தம் 33 பேரிடம் ரூ.3 கோடி பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக ரவீந்திரன் என்பவர் சார்பில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி விருதுநகர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து ரவீந்திரன் என்பவர் இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி கடந்த மாதம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.