புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11ம் (ஜூலை) தேதி ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மூன்று விசைப்படகையும், அதில் இருந்த 13 மீனவர்களையும் சிறை பிடித்துச்சென்றனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது 13 மீனவர்களையும் வருகின்ற 25ஆம் தேதி (அதாவது இன்று) வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இன்றுடன் சிறைக்காவல் முடிவடைந்த நிலையில் இரண்டாவது முறையாக புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் 13 பேரும் மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற 29ஆம் தேதி வரை சிறைக்காவலை நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்தார். இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ( ஜூலை 24) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.