Skip to content
Home » மாநில அந்தஸ்து…… ரங்கசாமி அரசியல் நாடகம்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

மாநில அந்தஸ்து…… ரங்கசாமி அரசியல் நாடகம்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடியவில்லை. அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதாக மத்திய மந்திரி முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி புகார் தெரிவித்தார். கோரிக்கைகளுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் சந்தித்த சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களிடம், அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதுடன் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து தடாலடியாக அவர் தெரிவித்த இந்த விமர்சனங்கள் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற் படுத்தி இருப்பதுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு முக்கிய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதுவை சாரம் அவ்வை திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-புதுவைக்கு பொறுப்பாக மத்திய மந்திரிகள் 3 பேரும், ஒரு எம்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தாண்டி கவர்னரும் பா.ஜ.க.வினர் போல் செயல்பட்டு வருகிறார். விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கேட்பது தொடர்பாக எதுவுமே தெரியாமல் கவர்னர் பேசிவருகிறார். மின்துறை தனியார்மயமாக்கப் படுவதுபோல், ஏராளமாக செலவு செய்த நிலையில் விமான நிலையத்தையும் தனியார் மயமாக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மாநில அந்தஸ்து பெற மதச்சார்பற்ற அணி மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும். இல்லையென்றால் உருப்படாது என்கிறார். மாநில அந்தஸ்து அதிகாரத்தை கொண்டுதான் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்தாரா?. தி.மு.க. போராடி இடஒதுக்கீட்டை பெற்றது. ஆனால், ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதுடன், அரசுப் பள்ளிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எடுத்து விட்டனர். நீட் தேர்வு, மின்துறை தனியார் மயம் உள்ளிட்டவற்றில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது முகத்தை காட்டவேண்டும். சிறப்புக்கூறு நிதியில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டுவது, தொழில்பயிற்சி அளிப்பது, உள்ளிட்ட 120 பணிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் எதையும் செய்யவில்லை. சிறப்புக்கூறு நிதியில் 22 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவது, சாலை வசதி ஏற்படுத்தி தருவது, ரேஷன்கடைகளை திறப்பது, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் தோல்வி அடைந்த மாநிலமாகவே உள்ளது. பாண்லேவில் 2.50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து வினியோகிக்க முடியும். ஆனால் ஏற்கனவே உள்ள 1.10 லட்சம் லிட்டர் உற்பத்தியையும் குறைத்து வருகின்றனர். முதல்-அமைச்சர் வெளியே வந்து வெகுண்டெழுந்து போராட வேண்டும். தனித்தன்மையையும், மாநில உரிமையையும் காக்கவேண்டும். இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் கூறியதாவது:- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்பதில் தவறில்லை. மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணமும். ஆனால் அதேநேரத்தில் நமது மாநிலத்துக்கு போதுமான வருமானம் உள்ளதா? என்று பார்க்கவேண்டும். நமக்கு இயற்கை வளங்கள் ஏதும் கிடையாது. 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரிக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரே எம்.பி. தொகுதியில் 25 லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால் அந்த ஒரு எம்.பி. தொகுதிக்கு ரூ.1000 கோடி வரை மட்டுமே செலவிடப்படுகிறது. அப்படியிருக்க புதுச்சேரி வளமாக இல்லை என்று கூறமுடியுமா? இப்போது மத்திய அரசு நமக்கு தேவையான நிதியை தருகிறது. நாம் தனிக்குடித்தனம் சென்றால் எந்த வழியில் வருமானம் வரும்?. முதலில் வருமானம் ஈட்ட வேண்டுமானால் தொழிற்சாலைகள் வளர்ச்சியை பார்க்க வேண்டும். ஒரேயடியாக மதுபான வருமானத்தையே நம்பி இருக்கக்கூடாது. இவ்வாறு சாமிநாதன் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!