கோவை திருப்பூர் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நேற்று சோமனூரில் நடைபெற்றது. கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மில் உரிமையாளர்கள் நெசவுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 19ம் தேதி(இன்று) முதல் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்களிலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்கள் மட்டுமின்றி, விசைத்தறி தொழிலைச் சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. பல்லாயிரகணக்கான தொழிலாளர்கள் இந்த போராட்டத் தில் குதித்தனர். இதனால் விசைத்தறிக்கூடங்கள் இன்று முடங்கின. இதன் மூலம் தினமும் ரூ.40 கோடி உற்பத்தி பாதிக்கும் என தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.