பிரபல பாடகர் யேசுதாசுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து இசை ரசிகர்கள், யேசுதாஸ் விரைவில் நலமடைய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
தனது தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை , அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருக்கிறார் என்றார்.
யேசுதாசுக்கு தற்போது 85 வயது ஆகிறது. 60 ஆண்டுகளாக பாடிக்கொண்டிருக்கிறார். தமிழ், மலையாளம், தெலங்கு உள்பட பல மொழிகளில் 60 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். இதுவரை 8 தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.