தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (11.08.2023) காவல்துறை சார்பில் நடைபெறும் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழாவில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்து மாணவ,மாணவிகளை உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி
கல்லூரிகளிலும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன எல்.இ.டி வீடியோ வாகனத்தின் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி ஆகியோர் முன்னிலையில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட குறும்படம் திரையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.