இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட்,நேற்று காலை டில்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இதில் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து தப்பி வெளியே வந்தார். அடுத்த வினாடியே கார் தீப்பிடித்து எரிந்தது.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பண்ட்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் நெற்றி, முதுகு மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக பண்ட் டில்லிக்கு விமானம் மூலம் அனுப்பப்படலாம். பண்ட் உடல்நிலையை கண்காணிக்க டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) குழு மேக்ஸ் மருத்துவமனைக்கு செல்வதாகவும், தேவைப்பட்டால் அவரை டில்லிக்கு அவரை மாற்றப்போவதாகவும் டிடிசிஏ இயக்குநர் ஷியாம் சர்மா கூறி உள்ளார்.
நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கேர் ஆகியோர் பண்டை சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர்கள், அவரையும் அவரது தாயையும் சந்தித்ததாக தெரிவித்தனர். மேலும், கிரிக்கெட் வீரர் தற்போது நலமாக இருப்பதாகவும், அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் அவர்கள் தெரிவித்தனர்.