Skip to content
Home » 35 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை கரந்தை கருணாசாமி கோயிலில் பல்லக்கு… கோலாகலம்..

35 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை கரந்தை கருணாசாமி கோயிலில் பல்லக்கு… கோலாகலம்..

இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் அருகே கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் என்கிற வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது.

தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து உள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும், கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 1988ம் ஆண்டு வரை வைகாசி மாத உற்சவம் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கு ஆகியவை ஏழு ஊர்களை சுற்றி வரும் விழா நடைபெற்றுள்ளது.

கால போக்கில் விழா தடைபட்ட நிலை நிலையில் தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு திருவிழா கடந்த மே 20ம் தேதி ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது தொடர்ந்து தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் பல்லக்கு, சுவாமி கண்ணாடி பல்லக்கிலும், வெட்டி வேர் பல்லக்கிலும் உலா வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ கந்தர் மற்றும் ஸ்ரீ தனி அம்மன் சுவாமிகள் பல்லாக்கில் எழுந்தருளினர், அதைப்போல் வெட்டிவேர் பல்லக்கில் ஸ்ரீ வசிஷ்டர், ஸ்ரீ அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர்.

இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது, சிவகணங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கினை தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர் பல்லக்குகள் ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களான, வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் (கரந்தை), தஞ்சைபுரீஸ்வரர் திருக்கோவில், (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் ( திருதென்குடி திட்டை), சொக்கநாதர் திருக்கோவில்,( கூடலூர் திருக்கூடலம்பதி), ராஜராஜேஸ்வரர் திருக்கோவில், (கடகடப்பை, கைலாசநாதர் திருக்கோவில் (திருப்புன்னை நல்லூர்), பூமாலை வைத்தியநாதர் திருக்கோவில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கு புறப்பட்டு சென்றன.

ஏழூர் புறப்பாடு முடிந்தது சுவாமி கோவிலுக்கு வந்தடைந்ததும் பக்தர்கள் மத்தியில் ஸ்ரீ சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி அதிவிமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் பேரூர் கட்டளை தம்பிரான் சிவப்பிரகாச அடிகளார், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் விமூர்த்தானந்தர் மற்றும் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!