சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அனுமந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.29.70 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள், எம்பி நிதியில் கட்டப்பட்ட நூலகக் கட்டிடம் ஆகியவற்றை ப.சிதம்பரம் நேற்று திறந்து வைத்தார். மாங்குடி எம்எல்ஏ, முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ப.சிதம்பரம் அங்கிருந்த ஆசிரியர்களிடம் எந்தெந்தப் பகுதிகளில் இருந்து மாணவர்கள் படிக்க வருகின்றனர் என்று கேட்டார். அப்போது தேவகோட்டையில் அரசுப் பள்ளி இல்லாததால், அங்கிருந்து இங்கு மாணவர்கள் படிக்க வருவதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ப.சிதம்பரம், இதுகுறித்து மாங்குடியிடம் கேட்டார். தற்போது தான் தேவகோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார். இதைக் கேட்ட ப.சிதம்பரம், இதை வெளியே சொன்னால் வெட்கம் என்று தெரிவித்தார்.