திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அது திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பஞ்சப்பூரில் இருந்து கரூர் சாலை வரை கோரையாறு மற்றும் உயக்கொண்டான் ஆறுகளின் கிழக்கு கரைப்பகுதியில் மூன்று பகுதிகளாக புறவழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்ட பணி பகுதி 1,
சுமார் ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாகவும் திருச்சி மாநகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கும் வகையிலும் இந்த புறவழிச் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த சாலை பஞ்சப்பூரில் தொடங்கி கரூர் சாலை வரை 9.9 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படுகிறது. அதில் முதற்கட்டமாக பஞ்சப்பூரில் இருந்து கருமண்டபம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த திட்டப்பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. தற்போது இதற்கான டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.