நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் முறைகேடு, தில்லுமுல்லுகள் நடக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தேர்வாகிறார்கள். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி்முக பல வருடங்களாக போராடி வருகிறது. ஆனால் பாஜகவும், தமிழக கவர்னர் ரவியும் நீட் தேர்வுக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் நீட் தேர்வில் இந்த ஆண்டு வழக்கத்தை விட பெரிய அளவில் மோசடிகள் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக குஜராத் மாநிலத்திலும் நீட் தில்லுமுல்லுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனால் வட மாநிலங்களிலும் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் மோசடிகள் குறித்து கூறியதாவது:
நீட் தேர்வு நடத்தியதில் 2 விதமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து உள்ளன.இதில் முதற்கட்ட தகவல்களின்படி, தேர்வின்போது நேரமின்மைக்காக சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.ஆனால் கருணை மதிப்பெண் கொடுத்ததை அரசு ஏற்கவில்லை. எனவே அந்த மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மறுதேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.இதைப்போல 2 இடங்களில் கூடுதல் தவறுகள் நடந்திருப்பது வெளியாகி இருக்கிறது.இந்த பிரச்சினையை அரசு மிகவும் தீவிரமாக எடுத்து இருக்கிறது என்பதை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை நாங்கள் ஒரு தர்க்க ரீதியான முடிவுக்கு கொண்டு வருவோம்.இந்த முறைகேட்டில் தேசிய தேர்வு முகமை மூத்த அதிகாரிகள் உள்பட எந்த அதிகாரிகளும் தவறு இழைத்திருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேசிய தேர்வு முகமை ஒரு தன்னாட்சி அமைப்பாக இருந்தாலும், அதில் ஏராளமான சீர்தித்தங்கள் தேவைப்படுகிறது. இது குறித்து அரசு கவலைப்படுகிறது. எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என மீண்டும் உறுதியளிக்கிறேன். தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.