நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ் மற்றும் மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தனர். இன்று காலை திருமண நிகழ்வுகள் முடிவடைந்ததை அடுத்து கணேஷும், மஞ்சுளாவும் தங்களுக்கு சொந்தமான பொலீரோ காரில் நஞ்சநாட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

நீலகிரி மலைப்பாதையில் 2வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அருகில் இருந்த 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் பள்ளத்தில் பாய்வதை கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், இது தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் இருந்த கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நீலகிரி மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.