நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சரஸ்வதி வயது 90. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூதாட்டி சரஸ்வதி தனக்கு சொந்தமான அக்ரஹாரம் பகுதியில் உள்ள வீட்டில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 15 நேற்று காலை மூதாட்டி சரஸ்வதி மூக்கு, காது உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் சடலமாக வீட்டில் கிடந்தார். மேலும் மூதாட்டி சரஸ்வதி காதுகள் சேதப்படுத்தபட்டு காதில் அணிந்திருந்த தங்க தோடு மாயமானது தெரியவந்தது.. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி சரஸ்வதி சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த விசைத்தறி கூலி தொழிலாளிகள் தாமோதரன் வயது (30), கோகுல்ராஜ் வயது (19) ஆகிய இருவரும் மூதாட்டி சரஸ்வதியை நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு வந்ததும், குடிப்பழக்கம், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இருவரும் அன்றாட செலவிற்கும், மது குடிப்பதற்கும் மூதாட்டி அணிந்திருக்கும் நகைகளுக்காக அதிகாலை நேரத்தில் அவருடைய வீட்டில் நுழைந்து தூங்கும் போது அவர் காதில் உள்ள தோட்டை பறித்துள்ளனர். மூதாட்டி வலியால் துடித்து கத்தவே மூதாட்டியை முகத்தில்,மார்பு பகுதியில் கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரிடமிருந்து சுமார் இரண்டு கிராம் மூதாட்டி சரஸ்வதியின் தங்கத்தோடு பறிமுதல் செய்யப்பட்டு, இருவரையும் கைது செய்த போலீசார் குமாரபாளையம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.