அரியலூர் மாவட்டம், அரியலூர் ராஜாஜி நகர், 2வது தெருவில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.
நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நக்சா (NAtional geospatial Knowledge based land Survey of urban HAbitations – NAKSHA) திட்டமானது அரியலூர் நகரத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு, புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களை உருவாக்கி, அவற்றை உள்ளாட்சி அமைப்புகளால் பேணப்படும் சொத்துவரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், இத்திட்டம் அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் இன்றையதினம் முதல் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொண்டு ஒளிப்படம் (Ortho Rectified Image -ORI) உருவாக்கப்படும். அதன் தொடர்ச்சியாக அவ்வொளிப்படத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட புலங்களில் வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறைகளின் பணியாளர்கள்
அடங்கிய குழுக்களால் நிலஅளவை மேற்கொள்ளப்படும். பின்னர், நவீன நிலஅளவை கருவிகளைக் கொண்டு (DGPS மற்றும் ETS) நிலஅளவை செய்து புல வரைபடம் தயார் செய்யப்படும். நிலஅளவை செய்து தயார் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்துகொள்ளலாம். அவை விதிகளின்படி பரிசீலித்து தீர்வு காணப்படும். இதன் தொடர்ச்சியாக இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நிலஆவணங்கள் வெளியிடப்படும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த பின்னர் புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களும், சொத்துவரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள் நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும். எனவே, நக்சா திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த அரசு அலுவலர்களுக்கு ஒத்துழைப்பினை நல்குமாறு நில உடமைதாரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், உதவி இயக்குநர் (நில அளவை) கண்ணன், அரியலூர் நகராட்சி ஆணையர் (பொ) அசோக்குமார், நில அளவையர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.