அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் கண்டிராதீர்த்தம் வடக்குத் தெருச் சேர்ந்த அர்ஜுன்ராஜ் (34) . அர்ஜுன்ராஜ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் மீது திருமானூர் காவல் நிலையத்தில் போக்கிரி வரலாற்று பதிவேடு துவங்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 16.08.2024ம் தேதி அர்ஜுன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருடன் ஏலாக்குறிச்சியில் ஆண்டவர் டீக்கடை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திட்டி, பட்டாக்கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். தகவல் அறிந்து வந்த கீழப்பழூர் வட்ட காவல் ஆய்வாளர் ராஜீவ் காந்தி (திருமானூர் காவல் நிலையம் பொறுப்பு ) மற்றும் காவலர்களை ஆயுதங்களை காட்டி, கிட்டே வந்தால் வெட்டி விடுவேன் என்று மிரட்டி, தப்ப முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து திருமனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அர்ஜுன்ராஜ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அர்ஜுன்ராஜ் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி திருமானூர் காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளரும் கீழப்பழூர் வட்ட காவல் ஆய்வாளருமான ச.ராஜீவ்காந்தி கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் மேல் பரிந்துரையின் அடிப்படையில், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.இரத்தினசமி, அர்ஜுன்ராஜ் மீது குண்டாசின் கீழ் சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து அர்ஜுன்ராஜ் குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கக் கோரி, அதற்கான ஆணை பிரதியை காவல்துறையினர் திருச்சி சிறைத்துறை அதிகாரியிடம் அளித்தனர்.