தஞ்சை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரமாக அணைக்குடி, தேவன்குடி, வீரமாங்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உட்பட பல கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு நூற்றுக் கணக்கான ஏக்கரில் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பல மாதங்களாக குரங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப் படுத்துகின்றன. வீடுகளுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இது குறித்து அவர்கள் கூறும் போது கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வசித்து வருகின்றோம். இப் பகுதி படுகை நிலங்களில் தென்னை, வாழை, கரும்பு, காய்கறி பயிர்களை விளைவித்து வருகின்றோம். இந் நிலையில் எங்கள் நிலப் பகுதியில் கடந்த பல மாதங்களாக கூட்டம், கூட்டமாக குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கரும்பு, வாழை பயிர்களை உடைத்து துவம்சம்
செய்கின்றன. தென்னை மரங்களில் குட்டிகளோடு தாவி குதிக்கும் குரங்குகள் முற்றாத தேங்காய்களை பறித்து தண்ணீரை குடித்து விட்டு, அவற்றை அங்கிருப்பவர்கள் மீது தூக்கி வீசுகின்றன. வீட்டிற்கு வெளியே இருக்கும் குடி நீர் குழாய்களை திறந்து விட்டு அதில் குளித்து கும்மாளமிடுகின்றன. மேலும் வீடுகளில் புகுந்துவிடும் குரங்குகள் அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை வாரி இறைத்து அட்டகாசம் செய்கின்றன. கைக் குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள் பதறுகின்றனர். இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு குரங்குகளை வனத்துறையினர் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.