மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா, பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, தலைமை நிலையச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் தணிகைவேலு, விழுப்புரம் மண்டலச் செயலாளர் ஆர்.பி. ஸ்ரீபதி, மீனவர் அணி செயலாளர் ஆர்.பிரதீப் குமார், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி மற்றும் கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் கமல்ஹாசன் மீண்டும் மநீம தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது-
இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள் விபரம்;
தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக பூத்திற்கு குறைந்தது 5 பேரை நியமிக்க வேண்டும்
* மக்கள் நீதி மய்ய புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பொதுக்குழு எதிர்ப்பினை தெரிவிக்கிறது.
தமிழக மீனவர்களை மொட்டை அடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டிப்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.