Skip to content
Home » ஜூன் மாத இறுதியில் உடனடி தேர்வு… அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

ஜூன் மாத இறுதியில் உடனடி தேர்வு… அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

திருச்சியில் பொன்மலை, கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அந்த ‘மக்களை தேடி’ என்ற குறைதீர் முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று, மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள், திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மகேஷ் கூறியதாவது… பிரச்சனைகளை புரிந்து கொண்டால் தான், பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்பதால், இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவித்தோம். கொரோனா காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் அனைவருக்கும் முழு தேர்ச்சி வழங்கப்பட்டது. மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக வந்து, மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்செல்லும் வரை, அந்த மாணவரின் பெயரை வருகை பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தியிருந்தது.  அந்தவகையில், இந்தாண்டு பொது தேர்வு எழுத முன் வராத பல மாணவர்கள், தொழிற்பயிற்சி பள்ளிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் இடைநிற்றல் என கண்டறியப்பட்ட ஒரு லட்சத்து 88 ஆயிரம் மாணவர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து கல்வி கொடுத்துவருகிறோம். ஆண்டுதோறும் சராசரியாக 32 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முன் வருவதில்லை. கடந்த கல்வியாண்டில் அவ்வாறு தேர்வு எழுத முன் வராத 52 ஆயிரம் மாணவர்களை கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுத வைத்துள்ளோம்.
அதேபோல தற்போது பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை வரும் ஜூன் மாத இறுதியில் நடத்தப்படவுள்ள உடனடி தேர்வினை எழுத வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் கல்வியில் பின்தங்கிய 15 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்த வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அத்தகைய வகுப்புகளை நடத்த ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். அந்த திட்டத்தை வரும் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!