சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அணையை திறக்க வேண்டுமானால் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருக்க வேண்டும். அணைக்கு கணிசமான அளவு நீர் வரத்து இருக்க வேண்டும். 2 மாதத்தில் அணைக்கு கணிசமான தண்ணீர் வரத்து இருக்குமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 107 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. அதே நேரத்தில் நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளது. தற்போது உள்ள நீர்மட்டம் ஜூன் 12 வாக்கில் 97 அடியாக குறைய வாய்ப்பு உள்ளது.அந்த நிலையில் அணையில் இருந்து குறுவைக்கு தண்ணீர் திறந்தால் அணையின் நீர் 40 நாட்களுக்கு மேட்டுமே போதுமானதாக இருக்கும்.
அந்த 40 நாளில் விவசாயிகள் வயலை நடவுக்கு தயார் செய்திருப்பார்கள். அதற்குள் அணையின் நீர்மட்டம் 17 அடிக்கு குறைந்து விடும். எனவே அணை திறப்பதற்கு முன் தமிழகத்திற்கு நீர் வருவதற்கான சூழ்நிலைகள் உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 12ல் அணையை திறக்க அரசு தயாராக இருப்பதாகவே தெரிகிறது. இதற்காக தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா இன்று காலை மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.
அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளையும், அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார். மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு ஆய்வு சுரங்கம் மற்றும் அணை மின் நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.
வழக்கமான ஆய்வு பணிக்காக வந்துள்ளேன். மேட்டூர் அணை பராமரிப்பு பணி சிறப்பாக நடந்து வருகிறது. மேட்டூர் அணை நல்ல நிலையில் உள்ளது.
மேட்டூர் அணையில் கூடுதல் பணிகள் கேட்டுள்ள நிலையில், அந்தப் பணிகள் வழங்கப்படும். தற்போது, ரூ. 20 கோடியில் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மாதங்கள் மட்டுமே பணிகள் செய்ய முடியும். தற்போது, 2 மாதங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும். பாசன காலம் முடித்த பிறகு பணிகள் துவக்கப்படும். என்றார். ஆய்வின் போது மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேட்டூர் அணையில் இன்று காலை 8மணி நிலவரப்படி நீர் இருப்பு 107.79 அடி. அணையில் 75.306 டிஎம்சி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 922 கன அடியாக இருந்த நிலையில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி திறக்கப்படுகிறது.