Skip to content
Home » மராட்டியத்தில்……மணமகள் கேட்டு ஆண்கள் நடத்திய திடீர் போராட்டம்

மராட்டியத்தில்……மணமகள் கேட்டு ஆண்கள் நடத்திய திடீர் போராட்டம்

நாட்டில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. சில மாநிலங்களில் பெண்களைத் திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பீகாரில் மணமகன்கள் துப்பாக்கி முனையில் கடத்தபட்டு வலுகட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் இணைந்து மராட்டிய மாநிலத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சோலாப்பூரில் திருமணமாகாத ஆண்கள் இணைந்து இதற்காக பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் அதிகமான ஆண்கள் மணமகன் போன்று ஆடையணிந்து கலந்து கொண்டனர். சிலர் மணமகன் போல் அலங்காரம் செய்து கொண்டு பேண்ட் வாத்தியங்கள் முழங்க குதிரையில் மணமகன் போல் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் தங்களுக்குத் திருமணம் செய்ய அரசு பெண் ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுகொடுத்தனர்.

அவர்கள் தங்களது மனுவில், தாயின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் நிறுவனர் ரமேஷ் கூறும் போது இந்தப் பேரணியை சிலர் கிண்டல் செய்யலாம். ஆனால் ஆண் பெண்கள் விகிதாச்சாரம் மாறுபட்டு இருப்பதால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. மராட்டிய மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள்தான் இருக்கின்றனர். இதற்குக் காரணம் பெண் சிசுவதைதான். பெண் சிசுவதையைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது” என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!