டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ஆம் தண்ணீரை திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், காவிரி நீர் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் நல்லிரவு தண்ணீர் வந்தடைந்தது. அதிகாலை 3 மணி அளவில் பொதுப்பணித்துறையினர் 782 கன அடி நீரை பாசனத்திற்காக திறந்து விட்டனர். மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை
கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.